ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க தனது படைகளை மீளப் பெற்ற பின்னர் முதல் முறையாக அமெரிக்க உயர்மட்டத் தூதுக்குழுவினருக்கும் தலிபான்கள் தலைவர்களுக்கும் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.
நேற்று சனிக்கிழமை டோஹாவில் ஆரம்பமாக இந்தப் பேச்சுவார்த்தை இன்றும் தொடர்ந்து இடம்பெறுகிறது.
இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ள அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழுவில் வெளியுறவுத்துறை மற்றும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் அடங்கியுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையில் தீவிரவாத அமைப்புகளை கட்டுப்படுத்துவது, ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க குடிமக்களை வெளியேற்றுவது, ஆப்கானில் மனிதாபிமான உதவிகளை வழங்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், மற்றொரு முன்னுரிமையாக தலிபான்கள் வழங்கிய வாக்குறுதிகளை தொடர்ந்து பேணுவது, ஆப்கானிஸ்தானை மீண்டும் அல் கொய்தா உள்ளிட்ட பிற தீவிரவாத அமைப்புக்களின் உறைவிடமாக மாற்ற அனுமதிக்காமல் இருப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் ஆராயப்பட்டன.
இதேவேளை, தாலிபன்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்பதற்காக தாலிபான்களை அங்கீகரிப்பதாக பொருளாகாது என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளது.
இந்த சந்திப்பு தலிபான்களை சட்டபூர்வமான அங்கீகரிப்பதாக அமையாது. தலிபான்களின் தங்களது செய்பாடுகளின் ஊடாக தங்களை நிரூபிப்பதன் ஊடாகவே எந்தவொரு சட்டபூர்வமான அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என பேச்சுவார்த்தைக் குழுவில் பங்கேற்ற அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.